தொழிலில் நஷ்டம் அடைந்ததால் பரிகார பூஜை 3 வயது மகளின் வாயில் குங்குமத்ைத திணித்து கொடூரமாக கொன்ற தந்தை: ஆந்திராவில் பயங்கரம்

திருமலை: தொழிலில் நஷ்டம் அடைந்ததால் பரிகார பூஜை செய்வதாக நினைத்து 3 வயது மகளின் வாயில் குங்குமத்ைத திணித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பேரரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்  வேணுகோபால். பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு யாமினி என்ற மனைவியும் 3 வயதில் புனர்விகா, பூர்விகா ஆகிய  இரட்டை குழந்தைகளும் உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு யாமினி தனது குழந்தைகளுடன் அனுசமுத்திரம்பேட்டை மண்டலம், குப்புருபாடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது குடும்பத்தினருக்கு யாரோ வசியம் செய்து வைத்து விட்டார்கள் என நினைத்து, அதனை போக்க வீட்டில் பூஜைகள் செய்ய வேணுகோபால் முடிவு செய்தார். இதற்காக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது மாமியார்  வீட்டிற்கு சென்ற வேணுகோபால், தனது மகள்களான பூர்விகா, புனர்விகாவுடன் பேரரெட்டிப்பள்ளிக்கு வந்தார். புதன்கிழமை காலை குழந்தைகளுக்கு முகத்தில் மஞ்சள் பூசி பெரிய அளவில் குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி திருஷ்டி எடுத்து வீட்டில்  வித்தியாசமான பூஜைகள் செய்தார்.

பின்னர், பூர்விகாவை வீட்டிற்கு   வெளியே அனுப்பி விட்டு, புனர்விகாவின் வாயில்  வலுக்கட்டாயமாக குங்குமத்தை கொட்டி பூஜைகள் செய்தார். இதனை கவனித்த வேணுகோபாலின் தாய் துரசானம்மா, அண்டை வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். 2 மணி நேரம் வேணுகோபால் பூஜை செய்து வந்த நிலையில் குழந்தையின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்று மக்கள் பார்த்தபோது, புனர்விகா மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக யாமினிக்கு தகவல் தெரிவித்தனர்.

யாமினி வந்து புனர்விகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குழந்தையின் நிலைமை  கவலைக்கிடமாக  இருந்ததால் அங்கிருந்து   சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனர்விகா உயிரிழந்தாள். வேணுகோபாலை போலீசார்கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: