காவடி பழனியாண்டவர் கோயிலில் முருகனுக்கு வைர அங்கி அலங்காரம்

சேலம் :வைகாசி விசாகத்தையொட்டி, சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் முருகனுக்கு வைர அங்கி அலங்காரம் நடந்தது.சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் காவடி பழனியாண்டவர் கோயிலில், நேற்று வைகாசி விசாகத்தையொட்டி முருகனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி, தேன், நெய் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், முருகனுக்கு ராஜ அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம், அவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.

பின்னர் உற்சவ மூர்த்தியான வள்ளி, தெய்வ சமேத முருகப்பெருமானுக்கு பல்வேறு விதமான வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வைர அங்கி அலங்காரம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்தது. இதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான ஹோமங்கள் செய்யப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது.

108 சுமங்கலி பெண்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டு, அவர்களுக்கு பட்டுசேலை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து முருகபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. மதியம் மூலவர் முருகனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர். அதேபோல், சேலம் குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோயில், ஊத்துமலை முருகன் கோயில், கந்தாஸ்ரமம், அடிவாரம் முருகன் கோயில், பேர்லண்ட்ஸ் முருகன் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், ஆறகளூர் சிவன் கோயில், தேர்நிலையம் ராஜகணபதி கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories: