சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜர்: பல மணி நேரம் விசாரணை

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, ஆதாரில் திருத்தம் செய்த டிரைவர் ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து ஈரோடு ஏடிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையில் தனி விசாரணை நடந்து வருகிறது. சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக சேலம், ஓசூர், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம் திருப்பதி ஆகிய இடங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில், ஓசூர், திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 6 பேர் நேற்று ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர். அவர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி பல மணி நேரம் விசாரணை நடத்தினார். கோவை சரக டிஐஜி முத்துசாமி, ஈரோடு எஸ்பி அலுவலகம் வந்து விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து டிஐஜி முத்துசாமி அளித்த பேட்டியில் ஆந்திரா, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடமும் கருமுட்டை விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படும். தவறு நடந்திருந்தால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். கசட்ட விரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றார்.

Related Stories: