மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் நாயக்கர் கோயில் வளாகத்தில் ரூ 96 லட்சம் மதிப்பில் வைஷ்ணவ பாடசாலை கட்டடம் கட்டுவதற்கான பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். இவர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கடற்கரையோரம் சவுக்கு பயிரிட்டு பராமரித்து வந்தார். மேலும், இவரை ஊக்கப்படுத்த ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது. இவர், கடந்த 1914ம் ஆண்டு தனது சொத்துகள் அனைத்தையும் தர்ம சாசனங்களுக்கு பயன்படுத்த வேண்டுமென கைப்பட உயில் சாசனம் எழுதி வைத்துவிட்டு மறைந்துவிட்டார். இவரது, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்களில் நடைபெறும் உற்சவத்தின்போது, அன்னதானம் வழங்க வேண்டுமென அந்த, உயிலில் குறிப்பிட்டிருந்தார்.