ஆளவந்தார் நாயக்கர் கோயில் வளாகத்தில் வைஷ்ணவ பாடசாலை ரூ 96 லட்சத்தில் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் நாயக்கர் கோயில் வளாகத்தில் ரூ 96 லட்சம் மதிப்பில் வைஷ்ணவ பாடசாலை கட்டடம் கட்டுவதற்கான பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். இவர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கடற்கரையோரம் சவுக்கு பயிரிட்டு பராமரித்து வந்தார். மேலும், இவரை ஊக்கப்படுத்த ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது. இவர், கடந்த 1914ம் ஆண்டு தனது சொத்துகள் அனைத்தையும் தர்ம சாசனங்களுக்கு பயன்படுத்த வேண்டுமென கைப்பட உயில் சாசனம் எழுதி வைத்துவிட்டு மறைந்துவிட்டார். இவரது, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம்  தலசயன பெருமாள் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்களில் நடைபெறும் உற்சவத்தின்போது, அன்னதானம் வழங்க வேண்டுமென அந்த, உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, இவரது  சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை நிர்வகித்து வருகிறது. நெம்மேலியில், ஆளவந்தாருக்கு தனி கோயில் உள்ளது. இந்நிலையில், நெம்மேலி ஆளவந்தார் கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ96 லட்சம் மதிப்பில் வைஷ்ணவ பாடசாலை கட்டடம் கட்டுவதற்கான பணியை நேற்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்த கோயில் வளாகத்தில் கட்டுமான பணியை தொடங்க பூமி பூஜையை காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி தலைமையில் நடந்தது. இதில், செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், இன்ஜினியரிங் விங் குழுவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மேலும், ஆளவந்தார் கோயிலில் வைஷ்ணவ பிரபந்த மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: