திருத்தணி: ஆற்காடு குப்பம் கிராமத்துக்குள் மீண்டும் அரசு பேருந்துகள் இயக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் நடத்தினர். சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு குப்பம் என்னும் கிராமம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்தின் வழியாகத்தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது கிராமத்திற்கு வெளியே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை ஏற்படுத்திய பின், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் எதுவும் கிராமத்து வழியாக செல்வதில்லை. புதிதாக போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாகவே சென்று வருகின்றன. இதனால், பொதுமக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணிகள் என பலரும் தேசிய நெடுஞ்சாலைக்கு நடந்து வர வேண்டிய அவல நிலை உள்ளது.