புதுச்சேரியில் உழவர் சந்தையை மூடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: விற்பனைக்கூட தொழிலாளர்கள் - விவசாயிகள் இடையே வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டையில் உழவர் சந்தையை மூடி விற்பனை கூட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாஸ்பேட்டையில் உள்ள உழவர் சந்தையை மூடி விட்டு ஒழுங்குமுறை விற்பனை கூட தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உழவர் சந்தைக்கு காய்கறிகளை எடுத்து வந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

அப்போது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தாங்கள் எடுத்து வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். விவசாய பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்காக உழவர் சந்தைக்கு கொண்டு வந்தால் ஊழியர்கள் கடைகளை மூடி விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாய பொருட்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: