இந்து முறைப்படி நயன்தாராவுடன் திருமணம்; நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் நடக்கிறது.! விக்னேஷ் சிவன் பேட்டி

சென்னை: வரும் 9ம் தேதி மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாராவுடன் இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறினார். முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். அவர்கள் ‘நானும் ரவுடிதான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்தனர். மேலும், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்துள்ளனர். இருவரும் லிங் டுகெதர் பாணியில் சென்னையிலுள்ள ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, வரும் 9ம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் கூறியதாவது: சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் இருக்கிறேன். நயன்தாரா நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். எங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அதற்கு நன்றி. தற்போது நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். சென்னை மாமல்லபுரத்தில் வரும் 9ம் தேதி நயன்தாராவுக்கும், எனக்கும் இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது.

இதில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். வரும் 11ம் தேதி நயன்தாராவும், நானும் மீடியாவை சந்தித்து, எங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி ஓடிடி தளத்துக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும், திருமண நிகழ்ச்சிகளை இயக்குனர் கவுதம் மேனன் வடிவமைத்து இயக்குகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நயன்தாராவுக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: