சென்னை: சென்னையில் காவல்நிலையத்தில் விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கில் காவல்துறையை சேர்ந்த 5 பேரின் ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 18-ம் தேதி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது இருவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். அதனையடுத்து அவர்களை சோதனையிட்ட காவல்துறையினர் 5 கிராம் கஞ்சா மற்றும் பட்டா கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டதில் ஒருவர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் மற்றொருவர் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது.
இதில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியை மறைத்து வைத்திருந்த விக்னேஷ், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவர் என தெரியவந்தது. போலீசார் விசாரணையில் இருந்த விக்னேஷின் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 போலீசாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அந்த 5 காவல்துறை அதிகாரிகளான முனாஃப், குமார், தீபக், ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோ ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.