ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பயணிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில்  பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க  ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி  மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், பள்ளி வாகனங்களில் முன்புறம் பின்புறம், கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி  திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படுவதோடு, மண்டல போக்குவரத்து அதிகாரி மூலம் சோதனை மேற்கொள்ளப்படும். பேருந்து பணிமனைகளில் பணிகளில்  இருக்கும் பணியாளர்கள் தொடர் விடுப்பில் இருப்பதால்தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்விற்கு பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் முழுமையாக சரி செய்ய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* கூகுள் பே-யில் டிக்கெட் எடுக்கலாம்

பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Related Stories: