சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமாா் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக சார்பில், தஞ்சாவூா் சு.கல்யாணசுந்தரம், ஆா்.கிரிராஜன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.