கணவருக்கு பரோல் கோரி நளினி மனு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கணவர் முருகனுக்கு பரோல் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எனக்கு தமிழக அரசு பரோல்  வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை. 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. மருத்துவ  காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ம் தேதி நானும், மே 21ம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம். அந்த மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீது வரும் 13ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: