மெட்ரோ ரயிலில் எழுதப்பட்ட வாசகம் கொச்சியில் குண்டு வெடிக்கும்: உளவுத்துறை விசாரணை

திருவனந்தபுரம்: கொச்சி மெட்ரோ ரயில் பெட்டியில் கொச்சியில் குண்டு வெடிக்கும் என்று  ஸ்பிரே பெயிண்டால் வாசகங்கள் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 3 பெட்டிகளுடன் கூடிய மொத்தம் 25 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்கள் சர்வீஸ் முடிந்த பின்னர் ஆலுவா அருகேயுள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்படும். இரவில் பணிமனைக்கு வந்த பின்னர் அனைத்து பெட்டிகளும் சர்வீஸ் செய்யப்படும். இதனால் 24 மணி நேரமும் அங்கு தொழிலாளர்கள் இருப்பார்கள். இந்நிலையில் கடந்த 22ம் தேதி  இந்த பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பம்பா என்ற மெட்ரோ ரயில் பெட்டியில் கொச்சியில் குண்டுவெடிப்பு நடக்கும் என ஸ்பிரே பெயிண்டால் எழுதப்பட்டிருந்தது. காலையில் அந்த ரயில் புறப்பட தயாராக இருந்த போது தான் ஊழியர்கள் அதை கவனித்தனர்.

இதுகுறித்து கொச்சி மெட்ரோ போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த ரயில் அன்று முதல் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை.  கடந்த 22ம் தேதி இந்த சம்பவம் நடந்த போதிலும் இதுவரை போலீசார் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை வெளியே விடவில்லை. ஆனாலும் கொச்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து தேசத்துரோக பிரிவில் வழக்கு பதிவு செய்து ஒன்றிய மற்றும் மாநில உளவுத்துறை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories: