சீன விசா விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு: ஜூன் 3ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை

டெல்லி: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில், ஜூன் 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ சில வழக்குகளை தொடுத்துள்ளது. அதில் குறிப்பாக 2008 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனர்களுக்கு இந்தியாவில் பணி புரிவதற்கான விசா எடுத்துக் கொடுப்பதில் முறைகேடு நடந்ததாகவும், அதற்கு தலா 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் ஒரு புகாரானது எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனிடையே டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு முன்ஜாமீன் மனுவை கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட நிலையில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டுமானால் அதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இதனிடையே கார்த்தி சிதம்பரத்தை வரும் மே 30ம் தேதி வரை அமலாக்கத் துறை கைது செய்ய டெல்லி கீழமை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதே புகாரில் அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவரை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜூன் 3ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: