சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிநவீன அடுக்குமாடி கார் பார்க்கிங் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டரில், ரூ.250 கோடியில், 6 அடுக்குகள் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும் பணி, 2018ல் துவங்கியது. இந்த அடுக்குமாடி கார் பார்க்கிங் கொண்டது. இந்த வளாகத்தில் ஒரேநேரத்தில் 2,200 கார்கள் வரை நிறுத்தமுடியும். அதோடு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நவீன வசதிகளை கொண்டது.
இந்த அடுக்குமாடி கார் பார்க்கிங் கட்டடத்திலிருந்து, விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில், இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் மீது, மேற்கூரை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதோடு வாகனங்கள் செல்வதற்கான இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன 6 அடுக்குமாடி வாகன நிறுத்தம் பணிகள் முழுமையாக முடிந்து விட்டது.
வளாகத்திற்குள் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பயணிகள் நடந்து செல்வதற்கு வசதியாக, இந்த மேம்பாலத்தின் மீது, நீள்வட்ட வடிவில், மேற்கூரைகள் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 96 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் நடந்து வருகின்றன. அவைகள் முடிந்ததும், அதன் மீது கூரைகள் அமைக்கப்படும். அனைத்து பணிகளும் முடிந்ததும், விரைவில் அடுக்குமாடி வாகனம் நிறுத்தம் திறக்கப்படும். இந்த அதிநவீன காா்பார்க்கிங்கில் ஒரேநேரத்தில் 2,200 வாகனங்கள் நிறுத்த முடியும் இவ்வாறு அவர்கள் கூறினர்.