சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டு தக்காளி 100க்கும், பெங்களூர் தக்காளி 110க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வரத்து குறைந்து, தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து, தமிழக அரசு எடுத்த முயற்சியால், 110 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் ஒரு கிலோ நாட்டு தக்காளி ₹55க்கும், பெங்களூர் தக்காளி ₹80க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காலை 60 வாகனங்களில் சுமார் 900 டன் தக்காளி வந்தது.