மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெருவில் புதிய மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து சைதாப்பேட்டை பகுதியில் சுமார் 10 இடங்களில் மழைநீர் வடிகால் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசியதாவது:கடந்த ஆட்சிக் காலத்தில் மாநகரை அழகுபடுத்துகிறோம் என அலங்கோலப்படுத்தி விட்டார்கள். நடைபாதைகளை அகலப்படுத்துவதாக கூறி மழைநீர் வடிகால்களை மூடியதால்தான் கடந்த பருவமழையின் போது தியாகராயர் நகர், மாம்பலம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவேதான் தற்போது மழைநீர்வடிகால்கள் சீரமைப்பு, புதிய வடிகால்கள் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் நிலையை நிரந்தரமாக தவிர்க்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கிங் இன்ஸ்டிடியூட் முதியோர் சிகிச்சை மருத்துவமனையில் கட்டிடத்தின் தரம், ஸ்திரத்தன்மை குறித்து உறுதிப்படுத்த ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகிறார்கள்.ஆய்வு அறிக்கை அடிப்படையில் கான்ட்ராக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது. 1 கோடியே 63 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்தாமல் உள்ளார்கள்.அதேபோல் குரங்குஅம்மை பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புபவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு முகத்தில் கொப்பளம் போன்று இருந்துள்ளது, சோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனவே தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: