சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெருவில் புதிய மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து சைதாப்பேட்டை பகுதியில் சுமார் 10 இடங்களில் மழைநீர் வடிகால் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசியதாவது:கடந்த ஆட்சிக் காலத்தில் மாநகரை அழகுபடுத்துகிறோம் என அலங்கோலப்படுத்தி விட்டார்கள். நடைபாதைகளை அகலப்படுத்துவதாக கூறி மழைநீர் வடிகால்களை மூடியதால்தான் கடந்த பருவமழையின் போது தியாகராயர் நகர், மாம்பலம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவேதான் தற்போது மழைநீர்வடிகால்கள் சீரமைப்பு, புதிய வடிகால்கள் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் நிலையை நிரந்தரமாக தவிர்க்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.