சியுஇடி நுழைவுத்தேர்வுக்கு 11.51 லட்சம் பேர் விண்ணப்பம்: வரும் 31ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்

சென்னை: இளங்கலை படிப்புகளுக்கான சியுஇடி நுழைவுத் தேர்வு விண்ணப்பப் பதிவு கடந்த 22ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வரும் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் 2022-23 கல்வி ஆண்டு முதல் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான சியுஇடி தேர்வு ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை மூலம் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்.7ம் தேதி தொடங்கி மே 6ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மே 22ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு விண்ணப்பப்பதிவு கடந்த 22ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 11,51,319 பேர் விண்ணப்பித்துள்ளனர். 9,13,540 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

Related Stories: