தமிழக அரசுக்கு இயற்கையும் நல்ல ஒத்துழைப்பை நல்குவதால் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: விவசாயிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: உழவர்களின் நலனை முன்னிலைப்படுத்தும் தமிழக அரசுக்கு இயற்கையும் நல்ல ஒத்துழைப்பை நல்குவதால், விவசாயிகள் அரசுக்கும், அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை’ தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் அனைத்து சமூக மக்களின் வளர்ச்சிக்காகவும், தன்னுடைய வாழ்நாள் எல்லாம் போராடிய கலைஞர், அவருடைய எண்ணத்தில் வாழும் வேளாண் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நமது அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உழவர்களின் நலனை எப்போதும் பாதுகாத்து வரும் நமது அரசு, உழவர்களின் நலனுக்காக வேளாண் துறையினை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றியும்; வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்து உழவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறது.

உழவர்களின் நலனை முன்னிலைப்படுத்தும் நம்முடைய அரசுக்கு இயற்கையும், நல்ல ஒத்துழைப்பை நல்குவதால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மே 24ம் தேதி அதாவது நாளையதினம் (இன்று) மேட்டூர் அணையினை திறந்து வைக்க இருக்கிறேன். நான் தமிழ்நாடு வளர்ச்சிக்காக 7 அம்ச தொலைநோக்கு திட்டங்களை வகுத்து கொடுத்திருக்கிறேன். இந்த 7 அம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான ‘மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி’ என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ வகுக்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டமானது ஊரக வளர்ச்சி துறையின் மாபெரும் திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் என்பது இதனுடைய சிறப்பு.

2021-22ம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.227 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை நான் துவக்கி வைத்திருக்கிறேன். இந்த திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சமே கிராம அளவில் அரசு துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். கலைஞர் தமிழ்நாட்டில் அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து, முன்னேற்றம் காண வேண்டுமென தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்த உன்னத தலைவர். அந்த அடிப்படையில், இந்த திட்டமும் ஒருங்கிணைக்கும் பணியை முன்னிலைப்படுத்துவதால், தலைவர் கலைஞரின் பெயரை இத்திட்டத்திற்கு வைத்து இன்றைக்கு சிறப்பு சேர்த்திருக்கிறோம். அது சாலப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய் துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு / குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர் கடன்கள் வழங்குதல், பாசன நீர்வழி தடங்களை தூர்வாருதல் உள்ளிட்ட கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்து துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவர்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, வேளாண்மை - உழவர் நலத் துறையின் பல துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி பலப்படும். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால் நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும். கிராம வளர்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய இந்த காலகட்டத்தில், கிராமத்தில் உள்ள அனைத்து உழவர்களையும், ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடைய செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, அனைத்து துறை அலுவலர்களும் அர்ப்பணிப்போடு, சிந்தையையும் செயலினையும் ஒரே நேர்கோட்டில் செலுத்தி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திட கேட்டுக் கொண்டு, வேளாண் பெருமக்கள் அரசுக்கும், அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும்.

Related Stories: