சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை கண்டுகளிக்க தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வரிக்குதிரை ஒன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூங்காவில் இருந்த 18 வயதான டீனா என்ற பெண் வரிக்குதிரை உடல் நலக்கோளாறு காரணமாக பூங்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்று வந்தது. இதற்காக பூங்காவில் உள்ள மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து வந்த போதிலும், வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி வரிக்குதிரை உயிரிழந்தது.