தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கருணாசாமி கோயில் குளத்தை தூர்வாரும் போது சுடுமண் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் கரந்தையில் 1400 ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால சோழனுக்கு கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்தது. இதில் அவர், அந்த நோயை தீர்க்க பல மருத்துவ முறையை கையாண்டும் பலனில்லாமல் போனது. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய கடவுள், கருணாசாமி கோவில் குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் தோல் நோய் நீங்கும் என தெரிவித்தாராம். அதன்பேரில் கரிகாலசோழன் இந்த குளத்தில் நீராடியதில் நோய் நீங்கியதாக கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் இந்த குளத்தை மீட்க வேண்டும் என சிவனடியார்கள் வலியுறுத்தி வந்தனர்.