மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ15 கோடி சொத்துகள் சுவாதீனம்: அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ15 கோடி மதிப்புள்ள சொத்துகள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான லஸ் சர்ச் சாலை இடத்தில் 3 கிரவுண்ட் 736.5 சதுர அடியில் அமைந்துள்ள ரானடே நூலகத்திற்கு தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை உத்தரவின் அடிப்படையில் தனியே வாடகை நிர்ணயம் செய்து கோயிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது.

ரானடே நூலகத்திற்கு நியாய வாடகை 0.1 சதவிகிதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது. மேற்படி நிறுவனம் தற்போது கட்டிடத்தின் மாடி பகுதியில் வணிக நோக்கில் பட்டய வகுப்பு, கச்சேரி ஆகியவற்றிற்கு வாடகைக்கு விட்டு வாடகை வசூல் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இயங்கி வரும் கட்டிடத்தின் முதல் மாடியில் மேற்கூரையை அகற்றிவிட்டு தளத்துடன் கூடிய முதல் தளம் கட்டிடம் கட்டிட துறை மற்றும் கோயிலுக்கு மனு செய்து அனுமதி உத்தரவு வழங்கும் முன்பாகவே, அனுமதியின்றி முதல் தளம் கட்ட முயற்சி செய்யப்பட்டதை தொடர்ந்து விளக்கங்கள் கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டு,

உரிய கால அவகாசம், வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அந்நிறுவனம் விளக்கம் ஏதும் அளிக்காமல் துறை விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி பெறாமல் வர்தா புயல் கால கட்டத்தில் கோயில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அரசாணைகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்கள்/ மனைகளுக்கு நியாய வாடகை நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டது.

ரானடே நிறுவனத்தாருக்கும் உபயோகப்படுத்தியமைக்கான நியாய வாடகை நிலுவைகளை செலுத்தக்கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டது. நிறுவனத்தார் நியாய வாடகையை செலுத்தாததால் 19.5.2022 அன்று சொத்தில் பொருட்களுடன் சீலிடப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் நியாய வாடகை நிலுவையாக ரூபாய் 79,10,860 உள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: