நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி திருமணம்: நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது

சென்னை: தெலுங்கு முன்னணி இயக்குனர் ரவிராஜா பினிஷெட்டியின் மகன்கள் சத்ய பிரபாஸ், ஆதி. இதில் சத்ய பிரபாஸ் இயக்கத்தில் ரவிராஜா பினிஷெட்டி தயாரித்த ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த ‘மரகத நாணயம்’ படம் ரிலீசானது. அப்போது அவர்கள் காதலிப்பதை அறிந்த இருவீட்டு பெற்றோரும் அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது.

சமீபத்தில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் தங்கள் திருமணம் மே 18ம் தேதி நடக்கும் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தனர். அதன்படி சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் நிக்கி கல்ராணி கழுத்தில் ஆதி தாலி கட்டினார். இந்நிகழ்ச்சியில் இருவீட்டு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் நடிகர்கள் விஜய் வசந்த் எம்பி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஹரி, என்.லிங்குசாமி, தயாரிப்பாளர்கள் என்.சுபாஷ் சந்திரபோஸ்,டி.ஜி.தியாகராஜன், இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவிஸ்ரீ பிரசாத் கலந்துகொண்டனர்.

Related Stories: