திரைப்படங்களில் சண்டை காட்சிகள் வரும்போது ஆயுதங்கள், ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சென்னை: திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் வரும்போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். எந்தவித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் அமைந்துள்ளது.

திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையை பகுத்தறிய முடியாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். எனவே இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது ”இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டது”, ”சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல வெறும் கலர் பவுடர் தான்” போன்ற வாசகங்கள் இடம்பெற உத்தரவிட வேண்டும். மேலும் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான காட்சிகள் வரும்போது ஒளிபரப்படும் விழிப்புணர்வு வாசகங்களை போன்று சண்டை காட்சிகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: