ஜிஎஸ்டி, வரி விதிப்பில் மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு சம அதிகாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி : ஜிஎஸ்டி, வரி விதிப்பில் மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு சம அதிகாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல என்று தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு நம்பத் தகுந்த மதிப்பு மட்டுமே உண்டு. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய நாடு. குழப்பத்தை தவிர்க்கவே இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றிய அரசுக்கு கூட்டாட்சி அதிகாரத்தை தருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சம உரிமை உண்டு, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: