சென்னை : பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை செய்தியை அறிந்து அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் சிந்தினர். அத்துடன், விடுதலைக்கு பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது. இந்த நீதியமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டத்தை நிகழ்த்தினால் நாம் எதோ ஒரு கட்டத்தில் வெற்றியடைய முடியும். 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி என்றார்.