காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றனர். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் இளநிலை சமூகநீதி மற்றும் திருக்குறள் காட்டும் தொழில் நிலை பாடங்கள் விருப்பப் பாடங்களாக சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே. மாணவர்களின் திறமை, தகுதிக்கேற்ப எதிர்காலம் நிச்சயம் அமையும் என நம்பிக்கை உள்ளது.

மாணவர்களின் அடுத்தடுத்த உயர்வுக்கு பட்டம் என்பது ஒரு அடித்தளம். படிப்பும் இறுதிவரை தொடர வேண்டும். அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். வேலைக்கு தகுந்தாற்போல இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று பல்வேறு நிறுவனங்கள் கூறுகின்றன. வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தி தனியார் மையங்களில் பயிச்சி எடுத்துக் கொள்கின்றனர். இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஏழை மாணவர்கள் பயன்பெற ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றன.

உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிதி பற்றாக்குறை இருந்த போதிலும் மாணவர்கள் நலன் கருதி உதவி தொகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு 2010 முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு மாணவர்களுக்காக அரசு என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். பெற்றோர்களின் எண்ணங்களை மாணவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள். காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்.

எனது ஆட்சியில் உயர் கல்வியின் பொற்காலமாக ஆக வேண்டும் என திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். திருநங்களைகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் இலவசமாக கல்வி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: