அதிமுக ஆட்சியில் போலி தணிக்கை சான்று கொடுத்து 117 நிறுவனங்கள் முறைகேடு: மாசு கட்டுப்பாட்டு வாரிய விசாரணையில் அம்பலம்

சென்னை: தமிழக மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுவனங்கள் சமர்ப்பித்த இந்த தணிக்கை அறிக்கையில் பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் தங்களது மொத்த நிலையான சொத்து மதிப்பை குறைத்து காண்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், 117 நிறுவனங்கள் போலியான தணிக்கை சான்றுகளை கொடுத்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு விதிகளில் முறைகேடு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சான்றுகளில் பெரும்பாலானவை ஒரே மாதிரியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதில், ஒரு நிறுவனத்தில் கடந்த 2016ல் ₹58 லட்சம் இருந்த சொத்தின் மதிப்பில், ₹24 லட்சமாக குறைத்து குறிப்பிட்டுள்ளனர்.  இந்த சொத்தின் மதிப்பை வைத்து தான் லைசென்ஸ் கட்டணம் இறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக, ₹5 கோடிக்கு கீழ் சொத்து மதிப்புள்ள நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ₹38,750 செலுத்த வேண்டும். அதே போன்று ₹5 கோடி முதல் ₹10 கோடி வரை மதிப்பு உள்ள நடுத்தர நிறுவனங்கள், ₹10  கோடி மதிப்புக்கு மேல் உள்ள நிறுவனங்கள், தங்களது மதிப்பிற்கு ஏற்ப உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.ஆனால், 117 நிறுவனங்கள் சொத்தின் மதிப்பை குறைத்து தவறான தணிக்கை  சான்றை சமர்பித்துள்ளனர். இவர்களின்  முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால், நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு 3 மாதம் அல்லது ₹10 ஆயிரம் அபராதம், இல்லையெனில் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: