அமித் ஷா குறித்த சர்ச்சை கருத்து; ​ராகுல் காந்திக்கு எதிரான பிடிவாரண்டுக்கு தடை.! ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஞ்சி: அமித் ஷா குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், ​ராகுல் காந்திக்கு எதிரான பிடிவாரண்டுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்  ஷாவுக்கு எதிராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது. ‘கொலைக் குற்றவாளியை  பாஜக தலைவராக்கலாம்; ஆனால் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இவ்வாறு செய்யாது’  என்று பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக  உள்ளூர் தலைவர் பிரதாப் குமார் என்பவர் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில்  ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்  பிறப்பித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  ஜார்க்கண்ட்  உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.திவேதி விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவில், ‘ராகுல் காந்தி மீது எந்தவொரு கட்டாய  நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கீழமை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த  வழக்கில் புகார்தாரர் பிரதாப்குமாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. மேலும், அரசிடம் இருந்தும் பதில் கோரியுள்ளது. இந்த  வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

Related Stories: