சென்னை: ஈழத்தமிழர்களின் கண்ணீரை துடைக்க முதலமைச்சர் முன்வந்து இருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம் என வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கைக்கு அரிசி, மருந்து, பால் பொருட்கள் அனுப்புவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினோம். ரூ.134 கோடி மதிப்புள்ள 40,000 டன் உயர் தர அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்.