சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த மாத இறுதிக்குள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த மாத இறுதிக்குள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை ராயப்பேட்டை சித்தி முத்தி விநாயகர் திருக்கோயில், பெரிய பாளையத்து அம்மன் திருக்கோயில்களில்  மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்பு அமைச்சர் கூறியதாவது; கடந்த மானியக்கோரிக்கையின் போது 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.

அதில் நகர்புறங்களில் அமைந்துள்ள 200  சிறிய திருக்கோயில்கள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ராயப்பேட்டை பகுதியில் உள்ள பழைமையான சித்தி முத்தி விநாயகர் திருக்கோயில், பெரிய பாளையத்து அம்மன் திருக்கோயில்களில் ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திருக்கோயில்களை பழைமை மாறமால் புதுப்பிக்கவும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு திட்டங்கள் தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதை பதிவு செய்துள்ளோம். சட்டபூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது.

எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளித்தன் மூலம் எதிர்காலத்தில் இந்து அமைப்புகள் அரசு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி அவர்கள் அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்கும் சமமான அரசாக இந்த அரசு உள்ளது ஆர்.ஏ. புரம் பகுதியில் தனி நபர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளோம் திருக்கோயில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திரு,எழிலன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, சென்னை மண்டல இணை ஆணையர் திருமதி ரேணுகாதேவி செயல் அலுவலர்கள் திரு.முரளிதரன், திரு ஹரிகரன் 118 வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.மல்லிகா யுவராஜ் உள்ளிட்டோர்  கலந்துக் கொண்டனர்.

Related Stories: