பலத்த சூறைக்காற்றுடன் மழை: பெரம்பலூரில் 2,500 வாழை மரங்கள் சேதம்-தென்னை மரங்களும் முறிந்தது

பெரம்பலூர் : பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பெரம்பலூரில் 2500 வாழை மரங்கள் தாரோடு சாய்ந்து சேதமானது.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 8ம் தேதி மாலை தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று வடஆந்திரா- ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் சூறைக்காற்று வீசியது. இதில் ஓரிரு மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. மாநகர் மற்றும் துறையூர், தா.பேட்டை, மணப்பாறை, துவரங்குறிச்சி, துவாக்குடி பகுதிகளில் நேற்று காலை 7 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதன்பிறகு அரை மணி நேரத்துக்கு லேசான மழை தூறி கொண்டே இருந்தது. மழை விட்டாலும் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்து காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் தொண்டமாந்துறை,குரும்பலூர், மூலக்காடு, விசுவக்குடி பகுதிகளில் 2,500 வாழைமரங்கள் முறிந்தும் தாரோடு, வேரோடு சாய்ந்து பாதிப்புக்குள்ளானது. வேளாண் துறையினர் வாழை சேத மதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: