ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி இறந்த விவகாரம் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்கு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மாதவரம் சுதர்சனம் (திமுக), பெரும்புதூர் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தளி டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூ) ஆகியோர்,  ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்த தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி இறந்தது குறித்து பேசினர். அதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:, கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி மரணமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற குணசேகரன் மயக்க மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களை அனுப்பி மீட்பு பணியை செய்துள்ளது. ஆனால், மாநகராட்சியிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. இந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரண உதவியை பெற்று இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: