இலங்கை மக்களுக்கு மதிமுக ரூ.13.15 லட்சம் நிதி: முதல்வரிடம் வைகோ வழங்கினார்

சென்னை: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மற்றும் அடிப்படை தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், அரியலூர் சின்னப்பா, மதுரை பூமிநாதன், தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்தனர். அப்போது, மதிமுக சார்பில் ரூ.5 லட்சம், பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தங்களது ஒரு மாத ஊதியம் தலா ரூ.2 லட்சம், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம், ஒருவர் ரூ.1 லட்சம் என மொத்தமாக ரூ.13 லட்சத்து 15 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் வரைவோலை வழங்கப்பட்டது. அப்போது அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: