போதை தடுப்பு மையங்கள் அரசு அங்கீகாரம் பெற்றவையா என்பதை அறிந்து சிகிச்சை பெற மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தல்.!

சென்னை: போதை தடுப்பு மையங்கள் அரசு அங்கீகாரம் பெற்றவையா என்பதை அறிந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தேசிய ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு சார்பில் ஆஸ்துமா தொடர்பான கையேட்டை  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் மற்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஐடியில் 7, 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி முழு கட்டுப்பாட்டில் உள்ளது. தேவையற்ற பீதி தேவையில்லை, கவலைப்படவும் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

போதை தடுப்பு நிலையத்தில் நடந்த கொலை குறித்த அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, போதை தடுப்பு நிலையம் முழுவதுமாக சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன் “போதை தடுப்பு மையங்கள் அங்கீகரிக்கப்பட்டவையா எனப் பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்யாத மையமாக இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அந்த மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.

Related Stories: