நீட் தேர்வு தொடர்ந்தால் பத்தாண்டுகளில் மருத்துவ கட்டமைப்பு சீரழிந்து விடும்: மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: கல்வியை வியாபாரமாக்க தான் நீட் நுழைவுத்தேர்வு, நீட் தேர்வு தொடர்ந்தால் அடுத்த பத்தாண்டுகளில் மருத்துவ கட்டமைப்பு சீரழிந்து விடும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவர் அணியின் சார்பாக கல்வி, சமூகநீதி கூட்டாச்சி தத்துவம் குறித்த தேசிய அளவிலான மாநாடு 2வது நாளாக நேற்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வி துறை  அமைச்சர்  அன்பில் மகேஷ் பேசியதாவது:

தமிழகத்தின் முதல் உழைப்பாளி தமிழக முதல்வர்தான். நீட் உள்ளிட்ட எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத ஒரு அரசாக ஒன்றிய  அரசு இருந்து வருகிறது. திரிபுராவில் 3,500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 88,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,000 மாணவர்கள்  தேர்வு எழுதிய நிலையில் 37,000 தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று முடிவுகள் வருகிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய  அரசே நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

இதனால் தான் தமிழக முதல்வர் இதை பலிபீடம் என சொல்கிறார். இலவச மருத்துவம் அளிப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் மருத்துவத்தை வியாபாரமாக்க வேண்டும் என்று தான் நீட்டை கொண்டு வர முற்படுகிறார்கள். நீட் தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மருத்துவக் கல்வி என்பது சீரழிந்து விடும்.கல்வியாளர்கள் வைத்து தான் புதிய கல்வி கொள்கையை அமைக்க வேண்டும், ஆனால் அதிகளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து மட்டுமே உருவாக்கி உள்ளனர்.

சமஸ்கிருத்தை அதிகளவில் வைத்து தான் புதிய கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளனர். புதிய கல்வி கொள்கை ஆங்கிலத்தில் இருக்கும் போது 23 இடங்களில் சமஸ்கிருதம் பற்றி பேசி உள்ளனர். ஆனால் தமிழில் மொழி பெயர்க்கும் போது சமஸ்கிருதம் என்ற வார்த்தையே இல்லை. அப்படி ஒரு மோசடி வேலையை புதிய கல்வி கொள்கையில் அவர்கள் செய்துள்ளனர்.  இவ்வாறுஅவர் பேசினார்.

Related Stories: