சென்னை: துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மதிமுக மாவட்ட செயலாளர்களை பொதுச்செயலாளர் வைகோ சஸ்பெண்ட் உத்தரவிட்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன் மதிமுக தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டார். பிறகு அப்பொறுப்பை மேலும் வலுப்படுத்தி, `தலைமைக் கழக செயலாளர்’ என்று பெயர்சூட்டி, அந்த பொறுப்புக்கு பொதுக்குழு ஒப்புதல் பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்களை சஸ்பெண்ட் செய்து வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக கட்டுக்கோப்பை சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகிற செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்ட செயலாளர்), செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்), சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்ட செயலாளர்) ஆகியோர், மதிமுக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்ட செயலாளர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வருகிற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, மதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணை மேற்கொள்ளும். அந்த குழு அளிக்கிற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.