புதுச்சேரியில் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் செலவை வைத்தவர்களிடமே வசூலிக்க வேண்டும்: புதுச்சேரி நகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே நகராட்சியிடம் புகார் அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரர் தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி, புதுச்சேரியில் பேனர் கலாசாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.புதுச்சேரி நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே, அதை அகற்றியதற்கான செலவை புதுச்சேரி நகராட்சி வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: