தண்டையார்பேட்டை: கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்ததால் மீண்டும் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்புகளை பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாதவரம் அடுத்த கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி மகாத்மா (55). இவரது மனைவி லதா, இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார். கடந்த 24ம் தேதி இரவு 10.30 மணியளவில் வீட்டின் படியில் ஏறும்போது மகாத்மா நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை 7.50 மணி அளவில் மகாத்மா மூளைச்சாவு அடைந்தார்.