அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவு ரத்து .: மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014- ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி வி.எம். வேலுமணி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அறநிலையத்துறை கையகப்படுத்தியதை உறுதிப்படுத்திய ஐகோர்ட் தனிநீதிபதியின் உத்தரவையும் ஐகோர்ட் ரத்து செய்தது. கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நியமித்த உத்தரவும் ரத்து செய்துள்ளது.

மேலும் முறைகேடுகள் குறித்து அறநிலையத்துறை புதிதாக விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்கலாம். அனைத்து தரப்பு விளக்கத்தை கேட்டபின் சட்டத்திற்கு உட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் ஸ்ரீராம் சமாஜுக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணையை தொடங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீராம் சமாஜை கோயில் என்ற வரையரைக்குள் கொண்டு வர முடியாது. மேலும் சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சணை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை எனவும் ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Related Stories: