மாஸ்கோ : ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் இரும்பு ஆலை ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றும் ஐ.நா.சபை மற்றும் செஞ்சுலுவை சங்கத்தின் முயற்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ், நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற உதவுமாறு குட்டரஸ் கேட்டுக் கொண்டார். இதற்கு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள புதின், உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் போராடி வரும் டான்பாஸ் பிராந்திய பிரச்சனைகளில் முடிவு எட்டப்படாமல் பாதுகாப்பு உத்தரவாதத்தில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.