புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர் மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது; நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.3,000லிருந்து ரூ.6,000ஆக உயர்த்தி வழங்கப்படும். கடற்கரைக்கு நீலக்கொடி சான்று பெறுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்கப்படும். நீலக்கொடி சான்று பெறுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மஞ்சள் பை திட்டத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு 20% வரை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் சுற்றுச்சூழல் துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும். காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார். சென்னையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் குத்துச்சண்டை அக்கடமி அமைக்கப்படும். பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25,000 பசுமைப் பள்ளிகள் தேர்வு செய்யப்படும். துக்கோட்டை, திருவாரூர், நாகை, வேலூர் மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்படும்.

திமுக ஆட்சியில் சலவை தொழிலாளர்களுக்காக 36 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் 1,164 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். மேலும், நாமக்கல் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: