மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நிரம்புகிறது சோத்துப்பாறை அணை

பெரியகுளம் : மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம், 2 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. அணை முழுக்கொள்ளளவை எட்ட உள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் 126.28 அடி உயர சோத்துப்பாறை அணை உள்ளது.

அகமலை, சொக்கன் மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில், அணைக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில வாரங்களாக போதிய மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்து, 15 நாட்களுக்கு முன் அணை நீர்மட்டம் 75.11 அடியாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அகமலை, கண்ணக்கரை, சொக்கன் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 21ம் தேதி காலை அணையின் நீர்மட்டம் 102.66 அடியாக இருந்தது. 2 நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை அணை நீர்மட்டம் 113.16 அடியாக உயர்ந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்து 126 கனஅடியாக உள்ளது. குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருப்பு நீர் 75.85 மில்லியன் கனஅடி. கோடைமழையால் அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: