அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: அதிமுக பாஜக வெளிநடப்பு

சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது அரசு பல்கலை. துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் சென்னை பல்கலை. உள்பட 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது.

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசு நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தரை நியமிக்கும் ஆளுநருக்கு வழங்கக்கூடாது என நீதிபதி குழு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்சி ஆணைய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்திலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, விசிக, உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழக அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

Related Stories: