திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 55 பேர் கைது: எஸ்பி வருண்குமார் அதிரடி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 55 பேரை மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரின் தனிப்படை போலீசார் கைது செய்து 205 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்டம் போலீஸ் எஸ்பிக்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் தனிப்படை அமைத்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்த உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருத்தணி, கவரப்பேட்டை, ஊத்துக்கோட்டை, பாதிரிவேடு, ஆரம்பாக்கம், திருவள்ளூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தி வருகின்றனர்.

இந்த கஞ்சா வேட்டை 2.0 கடந்த மாதம் 28ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதுதொடர்பாக 55 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Related Stories: