ஒடுகத்தூர் வேலூர் அருகே வங்கியில் பெற்ற கடனை செலுத்தும்படி மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி, காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அங்கேயே தீக்குளித்தனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (29). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவரது மனைவி தேவி (25). ஒடுகத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பந்தன் என்னும் தனியார் வங்கியில் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு வாரம் ரூ.800 என 15 வாரங்கள் கட்டியுள்ளார். இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் வங்கி கடன் செலுத்தவில்லை. அதை வசூல் செய்யும் குழுவின் தலைவராக அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் மனைவி சிலம்பரசி(35) உள்ளார். வங்கிக்கு கட்ட வேண்டிய கடன் தொகையை உடனே கட்டும்படி சிலம்பரசி தேவி வீட்டிற்கு சென்று வற்புறுத்தியுள்ளார்.