பினாமி பெயரில் படம் தயாரிக்கிறேனா? நடிகர் கருணாஸ் ஆவேசம்

சென்னை: ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், இனியா, ரித்விகா, அருண் பாண்டியன் நடித்துள்ள படம், ‘ஆதார்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, அமீர், தேவா, ஸ்ரீகாந்த் தேவா கலந்துகொண்டனர். அப்போது கருணாஸ் ஆவேசத்துடன் பேசியதாவது: இப்படத்தை நான்தான் பினாமி பெயரில் தயாரிக்கிறேன் என்று தகவல் பரவியுள்ளது. கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்துக்கு பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் தவறு. அவர்களை எல்லாம் திருத்துவது என் வேலை இல்லை. ‘ஆதார்’ கதை மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளனர். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் ஆயிரம் விமர்சனத்தை முன்வைப்பார்கள். அதற்காக வருத்தப்பட்டு பதிலளிப்பதை விட, நடப்பதை எதிர்கொள்ள வேண்டும். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்தேன். லாபத்தையும் பார்த்தேன். நஷ்டத்தையும் பார்த்தேன். நான் சினிமாவுக்கு உண்மையாக இருந்தேன். அது என்னை எப்போதும் கைவிட்டது இல்லை. இவ்வாறு பேசினார்.

Related Stories: