ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியில் பாக். அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இல்லை: மாஜி பிரதமர் இம்ரான் பகீர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பு  இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து பிரதமராக இருந்த இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். அப்போதிருந்து ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தொடர்பாக, இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான்  ராணுவத்துக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து  வருகிறது.

சமீபத்தில் பெஷாவரில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான், ‘ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக  இல்லை’ என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும்  வகையில், இம்ரான் கானின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் நிராகரித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறுகையில், ‘பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தனி மனிதனுக்கு சொந்தமானது அல்ல; எங்களது அணுஆயுதங்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். ஆட்சி கவிழ்ப்புக்கு காரணம் வெளிநாட்டு சதி என்று இம்ரான் கான் கூறிய நிலையில், தற்போது அணுஆயுத அச்சுறுத்தல் குறித்து பேசியிருப்பது பாகிஸ்தான் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: