சென்னை: இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு புறம்பானது என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் மீனவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு, சிறையில் இருந்து வெளி வர நினைத்தால் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி செலுத்திவிட்டு பிணையில் செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த செயல் நீதிக்குப் புறம்பானது.