ஈரோட்டில் தனியார் கல்லூரி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

ஈரோடு : ஈரோட்டில் தனியார் கல்லூரி பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஈரோடு நாடார் மேடு லெனின் வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் வர்ஷினி (20). இவா், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு பிஇ படித்து வருகிறார்.

இவா் கடந்த 4ம் தேதி வழக்கம்போல் காலை மூலப்பாளையம் அருகே அவரது கல்லூரி பஸ்சில் ஏறினார். கல்லூரியை நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. நாடார் மேட்டினை கடந்து சாஸ்திரி நகர் பிரிவு அருகே வந்தபோது பஸ்சின் முன் பக்க கதவு திறந்து ஓடும் பஸ்சில் இருந்து வர்ஷினி சாலையில் விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த வர்ஷினியை அக்கம் பக்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் கல்லூரி பஸ்சில் இருந்து மாணவி வர்ஷினி தவறி விழுந்தது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: