தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து வெப்ப சலனம் அதிகரித்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வைகுண்டம், ராமேஸ்வரம், மயிலாடி 60 மிமீ, காயல்பட்டினம், எட்டயபுரம், கோவிலங்குளம், ஆர்எஸ் மங்கலம், குருங்குளம் 50 மிமீ, காரைக்கால், தென்காசி, பட்டுக்கோட்டை, பெருஞ்சாணி அணை, சூரலக்கோடு, தொண்டி  40 மிமீ, பாம்பன், ஆய்க்குடி, திருப்பூண்டி, சாத்தான்குளம், தக்கலை, நாகர்கோயில் மதுக்கூர், திருச்செந்தூர், வேதாரண்யம் 30 மிமீ மழை பெய்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை  பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதே நிலை 15ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். இதுதவிர தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: